யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிய ‘சீ.ரி. ஸ்கானர்’
புலம்பெயர் தமிழர்கள் உதவி

யாழ். போதனா வைத்தியசாலை,சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு, வட-மாகாணத்திலுள்ள மூன்றாவது நிலைப் பராமரிப்பு (tertiary care) மருத்துவ சேவைகளை வழங்கும் வைத்திய நிலையமாகும். , இதர முதலாம் நிலைப் பராமரிப்பு (primary care), இரண்டாம் நிலைப் பராமரிப்பு (secondary care) சேவைகளை வழங்கும் மருத்துவ நிலையங்கள், சிறப்பு மருத்துவ சேவைகள் தேவைப்படும் நோயாளிகளை இங்கு தான் அனுப்புகிறார்கள். வடமாகாணம் முழுவதுக்கும் உள்ள ஒரே மூன்றாம் நிலை வைத்தியசாலை இதுவாகும். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள நோயாளிகள் சிறப்பு மருத்துவத் தேவைகளுக்கு இங்குதான் வருகிறார்கள்.

மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவு (Medical Intensive Care Unit (MICU)), இருதய சிகிச்சைப் பிரிவு (Coronary Care Unit (CCU)) ஆகியவற்றுடன் சேர்த்து 1280 நோயாளிகளைப் பராமரிக்க வல்ல இடவசதிகளை இவ் வைத்தியசாலை கொண்டிருக்கிறது. இதை விட, அறுவைத் தீவிர சிகிச்சைப் பிரிவு (Surgical Intensive Care Unit (SICU)), மகப்பேற்று தீவிர சிகிச்சைப் பிரிவு (Obstetric Intensive Care Unit (Obs ICU)), அகால குழந்தை சிகிச்சைப் பிரிவு (Pre-mature Baby Unit (PBU)) ஆகிய சிறப்புத் தேவைகளுக்கான பிரிவுகளும் இங்குண்டு.
ஒரு நாளைக்கு 800 வெளி நோயாளர்களும் (Outpatients), 1100 உட்தங்கும் நோயாளிகளும் (Inward Patients), 1270 சிகிச்சையக நோயாளிகளும் (Clinic Patients), 73 பாரிய அறுவைச் சிகிச்சைகளும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.
இங்குள்ள கதிரியக்கப் பிரிவில் 3 கதிரியக்க ஆலோசகர்களும்* (Consultant Radiologists), 4 மருத்துவ அதிகாரிகளும் பணி புரிகிறார்கள் (*நோயாளிகளின் எக்ஸ்றே, அல்ட்ராசவுண்ட் பிம்பங்களைப் பார்த்து நோயறிகுறிகளை இனம் கண்டு தெரிவிக்கும் வைத்தியர்கள்).
இதற்கு முன்னர் இங்கு இரண்டு சீ.ரீ. ஸ்கானர்களே இந்த வைத்தியசாலையில் இருந்தன. இவை 2012 ம் ஆண்டு நிறுவப்பட்டவை. ஒவ்வொரு மாதமும் 1200 ஸ்கான்கள் இங்கு செய்யப்படுகின்றன. இந்த ஸ்கானர்கள் 16 வெட்டுக்களைச் (scans) செய்வன. இவை அடிக்கடி பழுதுபடுவதால் னோயாளிகளுக்கு சிறப்பான சேவைகளைச் செய்வதில் வைத்தியசாலை நிர்வாகம் சிரமப்பட்டு வந்தது.
சீ.ரீ.ஸ்கானர்

சீ.ரீ.ஸ்கானர்கள் உடலை அறுவை செய்யாமலே உள்ளிருக்கும் உறுப்புகளை எக்ஸ்றே கதிர்களினால் ஊடறுத்து அதன் உட்பாகங்களை விம்பமாகத் திரையில் காட்டுபவை. ஒரு நிமிடத்தில் இவை எத்தனை தடவை ஊடறுத்து விம்பங்களை உருவாக்குகின்றனவோ அந்தளவுக்கு விம்பங்கள் துல்லியமாகின்றன. உள்ளுறுப்புக்களில் நிகழும் மாற்றங்களை அவதானித்து கதிரியக்க ஆலோசகர்கள் (Consultant Radiologists) நோயைக் கண்டுபிடிக்கிறார்கள்
வவுனியா மாவட்டம் இங்கிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து இங்கு கொண்டுவரப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைகளை வழங்க நிர்வாகம் பெரும் சிரமப்பட்டு வந்தது. தடைப்படாத சேவைகளை வழங்க வேண்டுமென்றால் குறைந்தது 3 ஸ்கானர்களேனும் இந்த வைத்தியசாலைக்குத் தேவை.
விபத்து அவசர சிகிச்சைப் பிரிவொன்று சமீபத்தில் இந்த வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டது. இற்காக 160 வெட்டுக்களைத் தரும் ஸ்கானர் ஒன்றை நிர்வாகம் சமீபத்தில் நிறுவியுள்ளது. அதன் விலை 112 மில்லியன் இலங்க ரூபாய்கள். இதற்கான பணத்தில் 77 மில்லியன் ரூபாய்களை, ஐக்கிய இராச்சியத்தில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில நல்லுள்ளங்கள் தானமாகாக் கொடுத்துள்ளன. மீதியையும் வேறு பலரிடமிருந்து தானமாகப் பெற்று இவ் விடயத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள். யாழ் போதனா வைத்தியசாலை உட்பட நாடெங்கிலுமுள்ள மருத்துவப் பணிகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு மிக நீண்டகாலாமாக ஆதரவு தந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்கானர் பாவனையின் சம்பிரதாய ஆரம்ப நிகழ்வு அக்டோபர் 12ம் திகதி வைத்தியசாலையில் நிகழ்ந்தேறியது.
No related posts.