சுவை மணம் திடீர் இழப்பு | கோவிட்-19 வைரஸ் காரணமா?

மருத்துவர்கள் பலர் தெரிவிக்கிறார்கள்
சுவை, மணம் திடீர் இழப்பு பற்றிச் சில கொறோனாவைரஸ் நோயாளிகள் தெரிவிப்பதாக ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.
கடந்த ஒரு வாரமாக, உலகம் முழுவதும் கொறோனாவைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் தமது நோயாளிகள் திடீரென சுவையையோ, மணத்தையோ இழந்துவிட்டது பற்றிக் குறிப்பிட்டதாகத் தெரிவித்து வருகிறார்கள். காது, மூக்கு, தொண்டை (ENT) வியாதிகளுக்குச் சிகிச்சைகளை அளித்துவரும் நிபுணர்களின் அமைப்புகள் இவிடயம் பற்றிக் கலந்துரையாடி வருகின்றனர். இங்கிலாந்திலுள்ள ENTUK என்னும் அமைப்பு உத்தியோகபூர்வமாக அற்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெருமாபாலான நோயாளிகளின் வாக்குமூலங்களின்படி, இதர அறிகுறிகள் தோற்றம் தருவதற்கு முன்னரே இப்படியான சுவை, மணம் ஆகியவற்றுக்கான புலன்கள் செயலற்றுப் போயிருந்ததாக அறிய முடிகிறது. இதனால், இப்படியான புலனிழப்புக்கள் நோய்க்கான முன்னறிகுறிகளாகவும், எச்சரிக்கையாகவும் பார்க்கப்படமுடிய்மென இந் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இது வரையில், கோவிட்-19 நோயாளிகளுக்கும் சுவை, மணம் புலனிழப்புக்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்தி பெரிதளவில் ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை. “இரண்டுக்குமிடையில் தொடர்பு இருக்கிறது என்பது உண்மைதானா என்பதுகூட எம்ங்களுக்குச் சந்தேகம் தான்” என ஃபுளோறிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மணம், சுவை கற்கை மையத்தின் (Center for Smell and Taste at the University of Florida (UF)) பணிப்பாளர் ஸ்டீவன் மங்கெர் தெரிவித்துள்ளார்.
“விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், உங்களில் எவருக்காவது திடீரென சுவை, மணம் இலாமற்போனால் நீங்கள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுதல் வேண்டும்” என ஸ்டிவென் மங்கர் கூறுகிறார். இதுபற்றிய மேலதிக ஆராய்ச்சி இரண்டுக்குமான தொடர்பை உறுதிப்படுத்துமானால், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளியை உடனேயே சிகிச்சைக்காக அனுமதிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
முற்றான மண இழப்பு (anosmia) மற்றும் சுவை இழப்பு (dysgeusia) ஆகியன, வயது முதிர்வு, தலையடிபடுதல், நரம்புச் சீரழிவு (neurodegenerative) நோய் போன்ற பல காரணங்களினாலும் ஏற்படுகின்றன. அதே போல, இவ்விழப்புக்களுக்கு , கொறோனவைரஸ் உட்படப் பல வைரஸ் தொற்றுக்களும் காரணமாகாலாம் எனப் பிறிதொரு ஆராய்ச்சியும் தெரிவிக்கிறது.
இத்தாலியில் 59 பேரிடம் பெறப்பட்ட தரவுகளின்படி, 20 நோயாளிகள் (34%) தாம் ஒரு புலனையும், 11 பேர் (19%) இரண்டு புலன்களையும் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். அதே போல பொண், ஜேர்மனியில் யூனிவேர்சிட்டி மருத்துவமனையில், 100 பேர்களிடம் பெற்ற தரவுகளின்படி, மூன்றில் இரண்டு பன்கினர் ஒரு அல்லது இரு புலன்களையும் இழந்ததாகவும், அவ்வறிகுறி பலநாட்கள் நீடித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள். தென் கொரியாவில், சிறிதளவு கோவிட்-19 அறிகுறிகளைக் காட்டிய 2000 பேரிடம் பெற்ற தரவுகளின்படி, 300 நோயாளிகளுக்கு (15%) மணத்துக்கான புலனை இழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
கோவிட்-19 நோயாளிகள் ஏன் புலனுணர்வுகளை இழக்க வேண்டும்?
கொறோனாவைரஸ் நோயாளிகள் ஏன் புலனுனர்வுகளை இழக்கவேண்டுமென்பதற்கு மங்கர் சில விளக்கங்களைத் தருகிறார்.
சாத்தியம் 1: SARS-CoV-2 மூக்குக் கால்வாயின் (nasal cavity) உட் சுவரைப் பாதிப்பதன் மூலம் அப்பகுதியில் மட்டும் (localized inflammation) அழற்சியை உண்டுபண்ணியிருக்க முடியும். இவ்வழற்சி வாசனைக் கலங்களைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யலாம். சாத்தியம் 2: உள் வரும் வாசனையை நுகரும் கலங்களைக் குறிவைத்து வைரஸ் தாக்கலாம். அதிர்ஷ்டவசமாக, சாதாரண வேதிப்பொருட்களும் (chemicals), நோய்க்கிருமிகளும் (pathogens) இவ்வாசனைக் கலங்களை அழிப்பது வழக்கமாகையால் 30 முதல் 60 நாட்களுக்குள் உடல் இவற்றைப் புதுப்பித்துக் கொள்கிறது மகிழ்ச்சியான செய்தி என்கிறார் மங்கர்.
மூக்குக் கால்வாயில் உள்ள சுவரைத் தாக்குவதற்கும் அப்பால், மூளைக்கும், மூக்குக்கும் இடையிலுள்ள கிறிப்றிஃபோர்ம் (cribriform plate) தட்டை இவ் வைரஸ் ஊடுருவி, மூளையிலுள்ள மோப்பக் குமிழ்களை (olfactory bulb) தாக்கவும் கூடும். 2002-2003 காலப்பகுதியில் பரவிய SARS வைரஸ் எலிகளில் இப்படியான தொற்றுக்களைச் செய்தது நிரூபிக்கப்பட்டிருந்தது.
SARS-CoV-2 வைரஸ் மூளைக்குள் சென்று சுவாசம் மற்றும் இருதயத் துடிப்பு வீதம் ஆகியவற்றைக் கட்டுபடுத்தும் கலங்களையும் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கருத்துத் தெரிவித்துள்ளன. இது நிரூபிக்கப்படுமானால், கோவிட்-19 நோயாளிகள் சுவாசிக்கச் சிரமப்படுவதற்குக் காரணம், சுவாசப்பைகளை இயக்கும் மூளையின் கலங்களும், அவ்வியக்கம் சார்ந்த நரம்புத் தொகுதியும் பாதிக்கப்படுவது காரணமாக இருக்கலாம் என்ற புதியதொரு சிந்தனையும் எஅழலாம் என பொஸ்ரனிலுள்ள பெத் இஸ்ரேல் டீக்கொனெஸ் மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மத்தியூ ஆண்டர்சன் தெரிவித்துள்ளதாக ‘தி சயண்டிஸ்ட்’ (The Scientist) இணையத்தளம் தெரிவிக்கிறது. இருப்பினும், இவை எல்லாம் தற்போதைக்குக் கருதுகோள்களே தவிர நிரூபிக்கப்பட்டவையல்ல. உண்மையான ஆராய்ச்சிகள் மூலம் பெறப்படும் தரவுகளே உண்மையைக் கூறும்.
No related posts.